Thursday, October 18, 2007

இது புதுமை!

சித்திரங்கள் சிரித்தன!
சின்ன விரல்கள்
சிந்திய வண்ணங்கள்!
பூப்போல் எடுத்து
புன்னகையால் அணைக்க
புரியாத மொழியில்
மலர்ந்தன மின்விழிகள்!
கொஞ்சும் மழலையரின்
பஞ்சு விரல்கள்
பார்வைக்குள் பனித்தன!
பாசமென்ற கைகளுக்குள்
பனிமலராய்ப் பூத்தன!
இது புதுமை! இது புதுமை!

எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் !
பார்வை மொழியில் பனி மலரும் !
பிஞ்சு விரல்கள் அசைந்து
காலடியில் இசை பாட சுவைக்கும் !
கண்ணுக்குள் நிற்கும் கவிதை !
என்னுள் குதிக்கும் இனிமை !
இந்த மழலையரின் சொல்லுக்கு
மயங்கும் சுவைத் தேன் நான் !
சுட்டிப் பிள்ளைகள் எட்டிப்
பார்க்கும் திரை என் மனத் திரை !
மனத்திற்கு மகிழ்வூட்டும் மான்கள்
என் கண்ணின் மணிகள் !

No comments: