Sunday, January 27, 2008

எப்போது கற்போம் ??

பூக்களில் உறங்கும் மௌனம் ! எங்கும்
பார்க்காமலே செல்கின்ற உறவு ! இங்கு
ஏக்கங்களை வெளியிடும் பெருமூச்சு !
சின்னஞ்சிறு விரல்களின் உழைப்பு !
மொட்டுக்கள் வெடிக்காமல் மடியும்
உரிமை மறுத்து மடியும் புவியியல்!
வளர்ச்சியும் மகிழ்ச்சியும் மறுத்து
மண்ணில் நடக்கும் மனம்!
வெள்ளம் அடித்துச் சென்ற வாழ்வு
புயல் வீசிச் சென்ற பூங்கா
நிலம் அதிர்ந்து வீழ்ந்த மக்கள்
பெருமழை பேயாய்ப் பொழிந்த காலம்
வரும் வருமெனக் காத்திருந்து
வாராத கரையோரக் கனவுகள்
எல்லாம் எங்கே பேசின நம்மோடு ?
ஓடங்கள் ஓடிய ஓரங்களில் உள்ளம்
ஓய்வாகப் பார்க்கும் பார்வை! எல்லாமே
பூக்களில் உறங்கும் மௌனம் தானே!
உள்ளம் எப்போது கற்கும் அம்மொழியை ?

Saturday, January 12, 2008

உணர்ந்தால் உரையுங்கள்

காலம் ஒரே மாதிரி தான் ஒடுகிறது!
மக்கள் தான் மாறுகின்றனர்! எப்படி!
அதே இடம்! அதே செயல்!
ஆனால் மனிதர்கள் மாறுபட்டவர்கள்!
நினைத்தாலே இனிக்கின்றது நிகழ்வு!
இப்படியும் நடக்குமா? என்பதெல்லாம்
எப்படியும் ஒரு காலத்தில் நடக்கிறது!
நினைத்துப் பர்ர்க்க நேரமில்லா
ஒட்டம்! திரும்பினால் திருப்பு முனை!
கால ஒட்டத்தில் கரையேற நாம்
கடந்து வந்த பாதைகள் கவிதை
பாடுகின்றன! கடமையைச் செய்!
பயனை எதிர் பாராதே! இது கீதையின்
மொழி! இதைப் புரிந்து கொள்ள
எத்தனை காலங்கள்! விதிக்கப்
பட்டதை மாற்ற எவராலும் முடியாது!
இதுதான் இம்மொழியின் தத்துவம்!
இதை உணராத நம்மில் எத்தனை
மாற்றங்கள்! தடுமாற்றங்கள்!
தடுக்கி விழுந்ததற்குக் கூட காரணம்
அறியாத நாம் தவிப்பது ஏன்!
எப்போது உணர்வோம் இதனை?
எப்போது உணர்த்துவோம் உரிமையை?
உணர்ந்தால் உரையுங்கள்!




Wednesday, January 9, 2008

கேட்டதின் விளைவு

எதார்த்தம் வாழ்க்கை என்றால்
எதிரி கூட பொறாமைப் படுவான்!
அப்படியொரு இயக்கம் வேண்டும்.
நாம் உறுதியோடு உழைத்தால்
வியர்வை கூட இனிக்கும்.
மனம் நெகிழ்ந்தால் மயக்கும் மழலை!
மாறுபாடு தெரியாது !
எண்ணங்களின் எதிரொலி வீட்டின்
சுவர்களில் கூட ஒலிக்க வேண்டும்!
உள்ளத்தின் தூய்மை உதட்டில்
ஒளி வீச வேண்டும்! உருக்கம்
உன் செயலால் வெளிப்பட வேண்டும்!
எதையும் பார்த்து ஏமாந்து விடக் கூடாது!
ஏக்கம் கூட வெளியே தெரியக் கூடாது!
அப்படியொரு அமைதி வேண்டும்.
அமைதி ஆயிரம் தரும்.
ஆரவாரம் அதிர்ச்சியை ஏறபடுத்தும்.
அழகுணர்ச்சி அன்பில் வெளிப்பட வேண்டும்.
ஆக்கம் கண்ட போது அது அன்புப்
பெருமூச்சாய் வெளிப்பட வேண்டும்.
வெற்றிகள் இயல்பானதாகவும்
தோல்விகள் நடைமுறைகளாகவும் தோன்றினால்
துன்பங்கள் நம்மைத் தூய்மைப்படுத்தும்.
தவிப்புகள் பார்வையால் உணர்த்தப்பட வேண்டும்.
அப்போதுதான் ஒரு பண்பான
வாழ்க்கையைப் பர்ர்க்க முடியும்.
இவை இறுக்கமான மனத்திற்கு இன்னிசையாகும்.

Thursday, January 3, 2008

ஏன் ??

அழிவு ஒன்று தான் முடிவா ?
ஆற்றல் ஏன் வீணாகிறது ?
நாட்டை ஆள்வது
சுகம் என்றால்
நல்லோர் வாழ்வது சுமையா ?

நடவடிக்கை விரைந்தால்
கடைக்கோடி மனிதனும்
நலம் பெறுவானே!
நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமா ?

எங்கே இல்லை
குறைகள் ? எங்கே
இல்லை சுமைகள் ?
களைவதும் சுமப்பதும் சுகந்தானே !

வெற்றிகள் விளைவதில்லை
வேர்கள் பதியவேண்டும் !
குற்றங்கள் குறைய வேண்டும்
குறிக்கோள் உயரவேண்டும் !