Sunday, July 20, 2008

புதிய அறம் பாட வந்த அறிஞன்


பாரதி !

பாதி வயதில் இப்பாருலகை விட்டுச் சென்றவன். அவன் இன்னும் மீதி வயதும் வாழ்ந்திருந்தால், இந்த பாரதத்திற்கு, வீதி அமைப்பதற்குக் கூட விதி வகுத்து விட்டுச் சென்றிருப்பான் ! அந்த செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தையாய் மட்டும் வாழ்ந்துவிட வில்லை ! விதியே ! விதியே ! என் செய நினைத்தாய் தமிழச் சாதியை ? எவ்வகை விதித்தாய் ? என்று தட்டி எழுப்பி, உடலும் உள்ளமும் சோர்ந்தால் மருந்துண்டு; ஆனால் செய்கையும் சீலமும் குன்றினால் உயிர் வாழ வழியில்லை ! என்று நமக்குணர்த்தியவன். தனி அறம் பாட வந்த அறிஞன் இவன் ! புதிய திறம் பாட வந்த மறவன் இவன் !

நாமிருக்கும் நாடு நமது என்று கூட அறியாத மக்களின் மூட நம்பிக்கைகளைத் தகர்ந்தெறிந்தவன். அறியாமை இருளை ஓட்டிய பாரதி, நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா ! அரண்மனை அரியணையிலும், மாட மாளிகைகளின் பஞ்சணையிலும் தூங்கிக் கிடந்த தமிழ் மொழியை, சொல் புதிது ! சுவை புதிது ! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை ! என்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தவன். பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ! சிந்துக்குத் தந்தை ! செந்தமிழ்த் தேனீ !

சாதியின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டு, மண்டை உடைந்து, வீதிகளிலெல்லாம் கட்டிப்புரள்கின்ற நிலையை அவன் கண்டானில்லை. சமயச் சண்டைகளைப் போக்க அறம் ஒன்றே போதும் என்று நினைத்தவன். மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன். அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன். சாதிப்படைக்கு மருந்தவன். நம் உள்ளத்தைத் தொட்டு, உணர்வுகளைத் தூண்டுகின்ற இந்த உண்மையை அன்றைக்கு அவன் ஒருவன் தான் துணிந்து கூறினான்.

" ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் !
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைகிடப்போன் !
மகமது நபிக்கு மறையருள் வித்தோன் !
ஏசுவின் தந்தை ! எனப்பலரும் உருவகத்தாலே
உணர்ந்து உரைத்திடும் தெய்வம் ஒன்றே ! "

" பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம் !"

என்று தெய்வ நீதி உரைத்தவன்.

இந்த நாட்டுக் கல்விக் கொள்கையின் மீது பாரதிக்கு இணையில்லாத ஈடுபாடுண்டு. கல்வியைத் தந்தால்தான் சமுதாயம் விழிப்புறும் என்பதில் நிலையாய் நின்றான். அதிலும் பெண் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும் என்றவன் நினைத்திருந்தான். எங்கேபெண் அஞ்சி அஞ்சியே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து விடுவாளோ என்ற அச்சம் பாரதிக்கு இருந்திருக்கிறது ! அதிலும் படிப்பது பாவம் என்ற சூழ்நிலையில் பெண் கல்வி அறிவு பெறாமல் போய் விடுவாளோ என்று கலங்கி இருக்கிறான் ! அவளுக்கு வாழ்க்கை உரிமைகள் இல்லாமல் நசுக்கப் பட்டு விடுவாளோ என்று ஏங்கி இருக்கிறான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு? என்ற காலத்தில் அவன் பெண்ணறம் பேசினான். பெண் முதலில் தந்தைக்கு அடிமை ! பின் கணவனுக்கு அடிமை ! பின் மக்களுக்கு அடிமை ! என்று உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் " தாதரென்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாய் வாழ்வம் இந்த நாட்டிலே ! " என்று பெண்ணுரிமை பேசினான்.

அறம் என்பது கடமை !
அறம் என்பது கற்பு !
அறம் என்பது வாழ்க்கை !
அறம் என்பது நீதி !
அறம் என்பது வேதம் !
இவை அத்தனையையும் இந்தச் சமுதாயத்திற்குத் தந்தவன்.

கடமைகளைச் செய்யாதவன் இங்கே வாழ்தல் கூடாது. வாழ்க்கையின் நிலை கற்புடையதாக இருத்தல் வேண்டும். கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ; ஆணுக்கும் உண்டு ! சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் ஒழுக்க நெறி தவறாது வாழல் வேண்டும் என்று வாழ்க்கை அறம் பேசியவன். சமுதாயத்தில் நீதி தலை தூக்க வேண்டும்; அநீதியால் இழைக்கப்படும் கொடுமைகள் மறைய வேண்டும்; இல்லையெனில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்று நீதி அறம் உரைத்தவன் பாரதி !

சட்டத்தை சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு சாதாரண மக்களை சந்திக்கு இழுக்கும் நிலை கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகக்கூடாது. தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தானடிமை கொள்ளலாமா ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப் படலாமா ? என்று சமுதாய ஒழூக்கம் பேசியவன் பாரதி !

இப்படி தன் பேச்சிலும் மூச்சிலும் கனவிலும் நினைவிலும் நாடு நாடென்று சிந்தித்த பாரதி இந்த நாட்டை உயர்த்துவதற்கு தனி ஒரு அறம் பாடினான் ! தன்மானத்தினை இழந்து ஒருவன் அரச வாழ்வு வாழ்வதை அறவே அவன் வெறுத்திருக்கிறான். மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பரோ ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ ? என்றான்.

வணக்கத்திற்குரியது தாய்நாடு ! அதை வணங்கு ! வாழ்த்து ! ஒற்றுமை கொள் ! என்பதே அவன் உரைத்த அரசியல் அறம் ! இது புதுமை இல்லையா ? இப்படி நாட்டின் எதிர்கால அரசியலைப் பற்றி நாட்டுப்பற்று உள்ள ஒரு உண்மைக் குடிமகனாக நின்று சிந்தித்த அவன் சிந்தனை போற்றுதற்குரியது அல்லவா ? !

செல்வி ஷங்கர் - 20082008




30 comments:

செல்விஷங்கர் said...

பாரதி - புதிய அறம் பாடினான் - படியுங்களேன்

மங்களூர் சிவா said...
This comment has been removed by a blog administrator.
செல்விஷங்கர் said...

ஆம் சிவா - பாரதியைப் போல் பாடுவதற்கு பாரினில் ஒருவன் பிறந்து வர வேண்டும். உண்மை சிவா

துளசி கோபால் said...

அருமையா இருக்கு.

மகளுக்கு வாழ்த்து(க்)கள்.

செல்விஷங்கர் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி துளசி

Noddykanna said...

பாட்டுக்கொரு புலவன் பாரதி ஒருவன் மட்டும் தான்!

ஒற்றைக் குடும்பம் தன்னில், பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை!
மற்றைக் கருமங்கள் செய்து,
மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை!

-- இதெல்லாம் இப்போ மாறித்தான் போச்சு!உரிமை உரிமை-ங்குறது தான் வந்துச்சான்னு தெரியல!

அருமையான பதிவு! வாழ்த்துகள்!

அன்புடன்,
நாடிக்கண்ணா

குசும்பன் said...

//கல்வியைத் தந்தால்தான் சமுதாயம் விழிப்புறும் என்பதில் நிலையாய் நின்றான்.//

எங்கே தருகிறார்கள் கூவி கூவி விற்பனை செய்கிறார்கள்.

தருமி said...

அறம் பாடிய அறிஞனைப் பற்றி அந்த இளம் வயதில் இவ்வளவு அழகாகப் பேசிய உங்கள் செல்லப் பெண்ணுக்கு என் வாழ்த்துக்கள். எல்லாம் நல்ல பெற்றோர்கள் கிடைத்த நல்லூழ்.

நிஜமா நல்லவன் said...

அருமையாக இருக்கிறது. மகாகவி இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

சதங்கா (Sathanga) said...

ஆஹா அருமை. எத்தனை உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கவிஞன் அவன். எத்தனை பேரை தாம் வீரரென நினைக்க வைத்தவன். நாட்டுப் பற்று என்றால் பாரதி தான் முதலில் வருவான் இல்லையா ?! வீராமாக, தீரமாக கவிதை படைத்திட்டாலும், எதிலும் புதுமை செய்தவன் அவன். எளிய தமிழ் தான் என்றாலும், வித்தியாசமாய் வார்த்தைகளை கோர்த்தவன். அத்தனையும் உங்கள் மகளின் பேச்சில், அருமை. அருமை.

மீசைக் கவி
முண்டாசுக் கவி
...

ஆமா உள்ளங்கவர் கவிஞனுக்கு கவிதை எழுதாமல் யாருக்கு எழுதுவது ...

சென்ற ஆண்டு இறுதியில் எழுதியது, வந்து வாசித்துப் பாருங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_13.html

மெளலி (மதுரையம்பதி) said...

பாரதியின் சிந்தனைகளை தந்தமைக்கு நன்றி....இன்று இச்சிந்தனைகளுடன் வாரத்தை தொடங்குகிறேன். :-)

ambi said...

மிக நேர்த்தியான கட்டுரை. உணர்ச்சி பிரவாகமாக இருக்கு.

வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

நல்ல பதிவு. வாழ்த்துகள் மகளுக்கு. தமிழாசிரியையின் மகள் அல்லவா? தமிழ் எழுதக் கேட்கவா வேண்டும்???:)))))))

செல்விஷங்கர் said...

நாடிக்கண்ணா

மாறித்தான் இருக்கிறது உலகம். ஆனால் மாற்றங்கள் வேறு வடிவில் வந்து கொண்டிருக்கின்றன. கவிதைகள் என்றைக்குமே நம்மை கருத்து வழிச் செலுத்தும். வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

குசும்பன்

விற்பனை செய்தாலும் கல்வியைத் தருகிறார்கள் அல்லவா

செல்விஷங்கர் said...

தருமி

பிள்ளைகளின் சொற்கள் நம்மைப் பித்தனாக்கி விடும். அழகான உச்சரிப்பும், தெளிவான பேச்சும், மாணவப் பருவத்தில் நம்மை மயக்குவதுண்டு. நிச்சயம் பிள்ளைகள் தவம் தான் பெற்றோர்க்கு

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

நிஜமா நல்லவரே

நான் அடிக்கடி நினைப்பதுண்டு - பாரதியைப் படிக்கும் போதெல்லாம் - இன்னும் வழ்ந்திருக்கலாமே என்று

அவனது வைர வரிகள் :

வையத்தொழில் அனைத்தும் முனைந்து செய் - பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத நூல்கள் தமிழ் மொழியில் தோன்றல் வேண்டும்.

எவ்வளவு எதிர்காலக் கனவு பாரதிக்கு !

செல்விஷங்கர் said...

சதங்கா

பாரதியைப் படித்தால் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் தானாக வந்து சேரும். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே ! அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே ! இக்கவிதை அடிகள் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளாமலா இருக்கும்.

இவ்வரிகளைப் பிள்ளைகள் உணர்வோடு உச்சரிக்கும் போது நம் உள்ளம் எங்கோ சென்று விடும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

மதுரையம்பதி

பாரதியின் சிந்தனைகள் நம் எண்ணங்களைச் சீராக்கும். நல்ல தொடக்கம் - நல் வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

அம்பி

பாரதியைப் படிக்கும் போதே பள்ளத்திலிருந்து குதித்தெழுகின்ற நீர் போல் உள்ளத்திலிருந்து கருத்துகள் போட்டி போட்டுக்க் கொண்டு வரும். அதை வடிப்பதும் ஒரு சுவை தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

அன்பின் கீதா

ஆம். கன்றுக்குட்டிகள் துள்ளும் போது பசுவிற்கு மகிழ்சியாகத்தானே இருக்கும். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

NewBee said...

செல்வி அம்மா,

நலமா? :)

தாமதமாக வந்துவிட்டேன். :D :D

தங்கள் எழுத்துகள் எப்பொழுதுமே வலிமை வாய்ந்தவை.அதுவும் பாரதியைப் பற்றி எனும்போது வீரம் இன்னும் மிளிர்கிறது.

தங்கள் எண்ணமும் எழுத்தும் மகளின் குரலிலா?.... :). நன்று! :)

பி.கு.:21 பின்னூட்டத்திற்கும் ஒரு பெரிய வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...........

:))))

செல்விஷங்கர் said...

புது வண்டே !

பாரதியின் கருத்துகளைப் படிக்கும் போதே நம் மனதில் ஒரு பெருமித உணர்வு தோன்றும். அதனை ஒரு நல்ல குரலில் கேட்கும் போது நம்மை அறியாமல் நம் மனம் மயங்கும். மேடையில் குரலொலிக்கும் போது பார்வையாளர் வரிசையில் இருந்து அதைச் சுவைத்த காலங்கள் மறக்க முடியாதவை !

நல்நினைவிற்கு நல்வரவுகள்

+Ve அந்தோணி முத்து said...

அம்மா.

மிக மிக எளிமையான வரிகளில், வீரக் கவி பாரதிக்கு வணக்கம் செலுத்தியுள்ளீர்கள்.

பாரதியே இதைப் படித்திருந்தால்...
மனமுவந்து மகிழ்ந்திருப்பான்.


அனைவருக்கும் கடையனாக நான் வந்துள்ளேன்.

அம்மா மன்னிக்க வேண்டும்.

செல்விஷங்கர் said...

அன்பின் அந்தோணி

கவலை வேண்டாம் - எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் இங்கு வரலாம் - படிக்கலாம் - மகிழலாம்

இராஜ. தியாகராஜன் said...

அன்புடைய செல்வி சங்கர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.

திரு சீனா அவர்கள் தந்த சுட்டியிலிருந்து இந்த உரையைக் கண்டேன். மிக நன்று.

அன்பன்
இராஜ.தியாகராஜன்
www.pudhucherry.com
www.tyagas.wordpress.com
www.thamizhmozhi.blogspot.com

செல்விஷங்கர் said...

திரு இராஜ.தியாகராஜன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரத்னவேல் நடராஜன்

cheena (சீனா) said...
This comment has been removed by a blog administrator.
கரந்தை ஜெயக்குமார் said...

எளிமையான வரிகள் ஆயினும்
வலிமை மிகு வார்த்தைகள்