Tuesday, October 6, 2009

பதிவுகள் பலவிதம் - ஒவ்வொன்றும் ஒரு விதம்

பறவைகள் பலவிதம் - ஒவ்வொன்றும் ஒரு விதம் ! வானமெங்கும் ஓடி வானிலவைத் தேடி வண்ணங்கள் தீட்டுவது மனித மனம். அது ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை. ஆனாலும் வடிகால் என்ற ஒரே நோக்கம் இங்கிருப்பது வியப்பே !

பல்வேறு பட்ட கருத்துகள் - பலதரப்பட்ட சுவைகள் - பலவாறான எண்ண ஓட்டங்கள் - எங்கு செல்வது ? எங்கே நிற்பது ? எதில் துவங்குவது ? தொட்டபின் தோல்விகள் - நிகழ்வுகளின் முரண்பாடு - ஏற்ற இறக்கங்கள் என்று எப்படி எப்படியோ எண்ணங்கள் இங்கே வலையில் அகப்ப்படுகின்றன.

மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்பது போல் எழுத்து வடிவில் ஏக்கங்கள் - தூக்கங்கள் - துயரங்கள் - துன்ப வரைவுகள் - இன்ப நிகழ்வுகள் என எத்தனை எத்தனையோ இந்த வலைப்பூவில் பூக்கின்றன.

பதிவர்களின் நோக்கம் இடுகைகளில் தங்கள் இதயத்தை வடித்து விட வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கிறது. இது ஒரு தனிப்பட்ட நாட்குறிப்பு. பலரும் காண விரித்து வைக்கப்பட்ட நிலாப் படம். மொக்கைகள் தான் பெரும்பாலும் எல்லோராலும் சுவைக்கப் படுகின்றன.அவற்றினிற்குத்தான் ஆயிரக் கணக்கான மறு மொழிகள் .

சிந்தனை வாதிகளின் இடுகைகள் பலராலும் படிக்கப்பட்டாலும் மறுமொழிகள் மிகுதியாய்ப் பெறப்படுவதில்லை. நீண்ட இடுகைகள் நைல் நதியையும் மிஞ்சி விடுகின்றன. அவை பட்டனைத் தட்டியே நீளம் பார்த்து நகர்த்தி விடப்படுகின்றன. கதைகள் காளான் பூத்தது போல் தென்படும். சுவைத்தவர்கள் மறு மொழிகளில் தங்களைப் பதிவு செய்வர்.

சிரிப்பென்று சிரிப்பே வராத சிந்தனை வாதிகளின் சில இடுகைகளும் உண்டு. வரலாற்றுப் பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காணப்படும். அதில் பதிவர்களின் ஆழந்த சிந்தனை ஓட்டம் புலப்படும்.

கவிஞர்கள் தான் கவிதைப் பூங்காவில் பூத்துக் குலுங்குபவர்கள். காதல் கவிதைகள் இளமையின் நிழலாய்த் தோன்றும்.துன்பக் கவிதைகள் துயர நினைவின் சிந்தனை அலை வீசும். சமுதாயப் பார்வையாளரின் கவிதைகள் உண்மையிலேயே உள்ளத்தைத் தொடும். உழைப்பின் உருவம் அவர்களின் எண்ண ஓட்டங்களில் தென்படும்.

செய்திகளைப் பதிவுகளில் இடுபவர்கள் சிலர். உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள், உவகை ஊட்டும் நடிப்புச் செய்திகள், நாளெல்லாம் காண்கின்ற கேட்கின்ற நடைமுறைச் செய்திகள் என்று கவிஞர்கள் காவியமே புனைகின்றனர்.

படக்காட்சிகள்! இயற்கை! இயற்கையின் சீற்றம்!கடல்! காடு! மலை! விலங்கு! பறவை! கட்டடம்! திருவிழாக்கள்! தேரோட்டங்கள்! வாழ்க்கை! என்று நிழற்படங்களைப் பதிவுகளில் இடுவோர் பலர். கண்ணுக்கும் கருத்துக்கும் அவை சுவை கூட்டுகின்றன. இவை எல்லாம்
இவற்றின் நல்ல பக்கங்கள்.

மறு பக்கம் என்று ஒன்று உண்டல்லவா! அதன் விளைவு மேலானதாக இருப்பதில்லை. மனிதப் பண்பாட்டைச் சிதைப்பதாய் இருக்கின்றன.சில படக்காட்சிகள் கண்களை வலிக்கச் செய்கின்றன. சில கருத்துப் பதிவுகள் சிந்தனையை சீர்குலையச் செய்கின்றன. கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று உலகினர் சிலரைச் சீண்டிப் பார்ப்பதும் சற்றே இடிக்கின்றது.

எண்ணங்கள் எழுத்துரு ஆகும் போது இலக்கணங்களை மீறாமல் இருந்தால் இனிமை சேர்க்கும். அறியாத வயதினர் ஆழ்ந்து தேடும் பக்கங்கள் மனத்தினை அலைபாயச் செய்கின்றன. பொழுது போக்காக, மன மாற்றாக, ஓய்வு நேர ஈடுபாடாக உயர்ந்த சிந்தனைகள் ஆங்காங்கே வலையில் பூப்பதும் உண்டு.

சிரிப்பதும் சிந்திப்பதும் பார்ப்பதும் கேட்பதும் பேசுவதும் எழுதுவதும் இளைப்பாறுதலாக இருக்கும் போது குழுமங்களும் பதிவுகளும் இடுகைகளால் சிறக்கின்றன. சிந்தனைப் பூக்க்கள் சிலிர் காற்றில் சிரித்து மகிழ்கின்றன. வெயிலுக்கு நிழலாக மழைக்குக் குடையாக இருந்தால் மகிழ்ச்சி தானே !

செல்வி ஷங்கர் - 06.10.2009