Monday, June 25, 2012

இனிய மாலைக் காற்று

மாலை நேரக் காற்று
மகிழ்வாய் வீசும் ! பாடும்
குயில்கள் பறந்து செல்லும் !
புறாக்கள் பதுங்கும் மாடங்கள் !
மலை சூழ்ந்த மரங்கள் !
வானம் தொடும் மலைகள் !
இன்னும் இருக்கிறது இயற்கை !
இங்கே வீசும் காற்று
எங்கும் வீச வேண்டாமா ?
கிராமம் சூழ்ந்த நகரம் !
வளரும் கல்வி ! வாழும்
தொழில் ! எல்லாம் இங்கே !
ஏனோ மறந்தனர் மக்கள்
நாளும் காக்க இயற்கையை !


செல்வி ஷங்கர்

Saturday, June 23, 2012

காசிக்குப் போன கணபதி

மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத சமாஜம் வழங்கிய நந்தன நவரச நாடக விழாவில், 22.06.12 அன்று சென்னை நவ பாரத் வழங்கிய, கலை மாமணி கூத்த பிரான் நடித்த “காசிக்குப் போன கணபதி” நாடகத்தினைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

ஒரு இனிய மாலைப் பொழுதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த மேடை நாடகம். இயல்பான நடிப்பால் பாத்திரத்தை நம் மனத்தில் பதித்த நடிகர்கள் ! நல்ல மொழி நடை கருத்தை விளக்கத் துணை செயதது. நடிகர்கள் நாடகப் பாத்திரமாகவே மாறினர்.

பொய் சொல்லக் கூடாது ! மறந்தும் உண்மையை மறைக்கக் கூடாது ! இதனை ஒழுங்காய்ச் செய்தாலே போதும் ! இறைவனைத் தேடி எங்கும் அலைய வேண்டாம் ! கோவில் குளங்களைத் தேட வேண்டாம் ! உறவுகள் உண்மையாய் இருக்க வேண்டும் ! அன்பு மறைக்கப்படக் கூடாது ! ஒழுங்காய்ச் செய்யும் செயல்களே வழிபாடு ! காசிக்குப் போவது எளிதல்ல ! ஏதோ காசு பணம் சேர்ந்திருந்தால் செல்லும் சுற்றுலா அல்ல அது ! இறைவன் நினைத்தால் தான் நாம் செல்ல முடியும் ! இருந்த இடத்தில் இருந்தே இறைவனை நினைத்தால் அது காசி ! வாழ்க்கையில் நம்மோடு வளரும் சினத்தை விட்டு விடுதலே சிறந்த விரதம் ! நல்லவற்றை நினைத்து நல்லவற்றைச் செய்தலே நன்மை தரும் அறம் ! அதை விட இனியது வேறொன்றுமில்லை ! நல்ல நாடகம் ! நகைச்சுவை ததும்பும் நற்கருத்து ! மக்களே பாத்திரப் படைப்புகள் ! மனத்தை இயக்கும் இயங்கு தசைகள் ! மாலைப்பொழுதை நல்ல பொழுதாக்கிய நாடகம் இந்த “காசிக்குப் போன கணபதி” !.

செல்வி ஷங்கர்