Monday, October 14, 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள் !

தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள்  !

கன்னங் குழியச் சிரிக்கும் கவின் நிலவு
கைப் பிடித்து நடக்கின்ற குழந்தை !

வில்லாக வளைந்து விரல்வித்தை காட்டும் 
பள்ளிப் பருவத்து பசும்பொன் பதுமை ! 

கண்ணில் தெரிகின்ற வண்ணப் பாடல்கள் 
காதில் இனிக்கின்ற வளரிளம் பருவம் ! 

கணக்கீடு தவறாமல் கூட்டிக் கழிக்கும் 
கடும் உழைப்புக் காலங்கள் !

மனம் விட்டுப் பேசி வாய் விட்டுச் சிரித்து 
மகிழ்ந்திருக்கும் நேரங்கள் மனசுக்குள் மத்தாப்பு !

கண்ணெல்லாம் மகிழ கவின் படைப்பில் !
கருத்தெல்லாம் கசிந்துருகும் காவியங்கள் !  

சிந்தை எல்லாம் இனிக்கின்ற தீம்பாடல்கள் 
செவிகளிலே ஒலிக்கின்ற தேன் மொழிகள் ! 

ஒன்றாக ஒலிக்கும் ஒற்றுமைக் குரல்கள் 
நன்றாக வாழ்கின்ற நானில மக்கள் !

அன்பொன்றே பொருளாய் அகமுழுதும் 
மகிழ்கின்ற இல்லறப் பூங்கா ! 

இவரெல்லாம் நடமாடும் நானிலமே 
நமக்கு நல்வாழ்வுப் பூங்கா !

இவையெண்ணி !  நாமெல்லாம்  மனந்திறந்து
சிரிக்கும் நாளே நமக்குத் திருநாளாகும் ! 


செல்வி ஷங்கர்
14.10.2013 திங்கட்கிழமை 

ஓய்வு !

கஞ்சி குடித்த

களைப்பில்

கட்டாந்தரையில்

தூக்கம் !

மடித்த கையே

தலையணை !


Friday, June 14, 2013

வெள்ளை மனத்திற்கு வேர்கள்

வெண் முத்துக்களாய் சிதறுகின்றன 
எங்கெங்கோ செல்லும் மேகங்கள் !

மின்னும் விண்மீன்கள் கதிர்பரப்பும் 
கார்மேகத்தை கண்சிமிட்டி அழைக்கின்றன !

காரிருளில் வானம் ஒளிபரப்பும்
வண்ணக் கோலங்கள் இவை !

வெள்ளை மனமாய் விரிந்து
கிடக்கின்றன சிந்தனைப் பூக்கள் !

சிதறும் மழைத்துளிகள் மண்ணைக் 
காண மறுக்குமா ? கண்ணைக் 
காக்கும் இமையல்லவா நீர்த்துளிகள் !

சிந்தாமல் சிதறாமல் சிறுவிரல்கள் 
அள்ளுகின்ற மணல் பரப்பாய்
எண்ணங்கள் எழுந்தாடும் எங்கும் !

வெட்ட வெளியில் நட்ட மரங்கள்
நாளும் சிந்தும் சிறுபூக்கள் !
வெள்ளை மனத்திற்கு வேர்களாய் !
சிதறுகின்ற பனித்துளியாய் சிந்தனைக்
காற்று ! மனத்தில் மட்டுமல்ல 
மனிதத்திலும் பூத்துக் குலுங்கும், !


கவிதை ஆக்கம் : செல்வி ஷங்கர்
14.06.2013